குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வாழும் நண்பரின் கண்ணிர் கவிதை

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு
மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......!
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு
கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத
காற்றலைகள் நாங்கள்......!

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை
நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்........!
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...

தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்.......!
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்......!

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்...
எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்.....!
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்.....!
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்.....

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!

இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...
யாருக்காக...? எதற்காக...? ஏன்...?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்... தோரணம்போல் கண் முன்னே..."

மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
......யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

நன்றி : முகம் தெரியா நண்பர்